தாம்பூலம் மஹாலக்ஷ்மியின் அம்சம், மங்கள & மூலிகை கலவை.
இப்புவியில் தேவ, பித்ரு காரியங்களில் & மானுட வாழ்க்கையிலும் அதிமுக்கிய பங்காற்றுகிறது. இது ஏன், எங்கே & எப்படி ஆரம்பித்தது? இதற்கான ஆய்வில் கிடைத்த தரவுகளை வினயத்துடன் பதிவிடுகிறேன்.
வெற்றிலை & பாக்கு சேர்ந்தால் தான் தாம்பூலம். பாக்கு உபசாதனம். வெற்றிலையை தனியாக உட்கொள்ள கூடாது, பாக்கையும் தான்.
வாருங்கள்! வெற்றிலையின் ஆதி எது, பூலோகத்திற்கு எப்படி & யாரால் கொண்டு வரப்பட்டது என்பதை புராணத்தின் துணையுடனும் மற்றும் அதை உபயோகிக்கும் முறையை தர்ம சாஸ்திரம் கொண்டும் அறிவோம்.

வெற்றியிலையின் புராண பெயர் அமிர்தவல்லி (அ) நாகவல்லி.
புராணம்:
இது அநேகருக்கு தெரிந்த புராணமே. ஓர் சமயம் தேவர்களின் பலம் குன்றி அசுரர்களின் பலம் ஓங்கவே, திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமானிடம் முறையிடுகின்றனர் தேவர்கள்.
அமிர்தம் வேண்டி வாசுகி நாகத்தை கயிறாக திரித்து, மந்தர மலையை மத்தாக கொண்டு, கூர்மமாக பரந்தாமன் மலையை தன் முதுகில் தாங்க, வாசுகியின் தலை பக்கம் அசுரர்கள் பிடிக்க, வாலை தேவர்கள் இழுக்க திருப்பாற்கடலை கடைகிறார்கள்.

கடைந்ததில் கிடைத்தவை சில: ரத்னத்ரயம், கௌஸ்துபம், பாரிஜாதம், சுரபி, வாருணி, மஹாலக்ஷ்மி. அனைத்தையும் பதிவிட்டு அதன் காரண காரியத்தை இன்னோர் பதிவில் பார்போம்.
இறுதியாக தன்வந்திரி பெருமான் வெளிப்படுகிறார் ஓர் கையில் அமிர்த குடத்துடன் மற்றோர் கையில் அட்டை பூச்சியுடன்.

அட்டை பூச்சி ரத்தத்தை உறிஞ்சுவது நரக தண்டனை. ஆனால் தன்வந்திரியோ மருத்துவர் ஆயிற்றே, அவர் அதை சிகிச்சையாக பிரயோகிக்கிறார்.
ரத்தத்தை சுத்திகரித்து அதில் உள்ள அழுக்குகள், கொழுப்புகள், கெட்ட நீர்களை உறிஞ்சு எடுக்கிறது அட்டை பூச்சி. இது தான் 1st Dialysis Method.
இரு தரப்பினருக்கும் அமிர்தத்தை பங்கு போடுவதில் மோதல் மூண்டது. பகவான் மோகினி ரூபத்தை எடுத்து தான் சமமாக அனைவருக்கும் அமிர்தத்தை கொடுப்பதாக கூறி தேவர்களுக்கு வார்க்க ஆரம்பித்தார்.
அசுரர்களில் ஒருவனுக்கு மட்டும் சந்தேகம் உண்டாயிற்று, இது பரந்தாமன் தான் என்று. ஏதாவது சூழ்ச்சி பண்ணி அசுரர்களுக்கு அமிர்தத்தை தவிர்த்து விடுவார் என எண்ணி அமிர்தம் வேண்டி, அவன் தேவ ஸ்வரூபம் போல் வேடமணிந்து தேவ கோஷ்டியில் ஐக்கியமானான்.
அவர் அறியாததா என்ன, இருந்தாலும் கண்டும் காணாததை போல் அந்த அசுரனுக்கும் அமிர்தத்தை வார்த்தார்.
அதே சமயம் சூரியனும் சந்திரனும், அசுரனை இனம் கண்டு பகவானிடம் முறையிட, அதற்குள் அமிர்தத்தை அசுரன் விழுங்க, பெருமான் சுதர்சனத்தை பிரயோகிக்க, அசுரனின் உடல் தனியாக சிரசு தனியாக வெட்டுண்டு விழுந்தது.
அமிர்தத்தை விழுங்கியதால் வெட்டுண்டும், உயிர் பிரியாமல் அமரத்துவம் எய்திருந்தான் அசுரன். இதை கண்ட பெருமான், சூரியன் சந்திரன் கண்காணிப்பில் நிழல் கிரகமாக கிடவாய் என பணித்தார். இவர்களே ராகு-கேது.

இதனை கண்ட மற்ற அசுரர்கள் பயந்து ஓட, அவர்கள் மீண்டும் வந்து தேவர்களை இம்சிக்க கூடாது என்பதற்காக வாசுகி நாகத்தை காவல் நிறுத்தினார் பரந்தாமன். வாசுகி நாக லோகத்திலிருந்து அநேக சர்ப்பங்களை வரவழைத்து காவல் நிறுத்தியது இந்திர லோகத்தில்.
இன்னுமொரு ஆச்சர்ய தகவல்: சுதர்சனத்தால் வெட்டுண்ட வேகத்தில், அசுரனின் வாயில் இருந்து உமிழ் நீர் வெளியேறி விழுந்தன. அதில் அமிர்தத்தின் எச்சம் இருந்து, விழுந்த இடத்தில் கூர்மையான கோரை புற்கள் முளைத்தன. அங்கே காவலுக்கு வந்த நாகங்கள் புற்களை தீண்ட, அதன் கூர்மை நாகத்தின் நாக்கை வெட்டி பிளவு ஏற்படுத்தியது. இதிலிருந்து தான் நாகங்களுக்கு நாக்கு பிளவுடன் காணப்படுகிறது.

அமிர்தத்தை தேவர்கள் பருகியாயிற்று. அமிர்த குடம் மட்டும் நாகங்களுக்கு நடுவில் இந்திர லோக நந்தவனத்தில் வைக்கப்பட அதிலிருந்து ஓர் கொடி வெளிப்பட்டது.
தன்வந்திரி பகவானின் கடாக்க்ஷத்தால், அமிர்த குடத்திலிருந்து வெளிபட்டது அதீத மருத்துவ குணம் கொண்ட மூலிகை கொடியான வெற்றிலை.
பெயர் காரணம்: நாகங்களுக்கு நடுவே வெளிப்பட்ட கொடி என்பதாலும் & அமிர்த குடத்திலிருந்து வந்த காரணத்தினாலும் வெற்றிலையின் மூல பெயர் அமிர்தவல்லி (அ) நாகவல்லி.
தேவ லோகத்திலிருந்து வெற்றிலை பூமிக்கு எப்படி & யாரால் கொண்டு வரப்பட்டது ? பார்ப்போம் கீழே!
இந்திர லோகம் எப்படி இருக்கும் என காணும் அவா கொண்டு, வானிவத்சரகன் எனும் அரசன் தேவேந்திரனை நோக்கி தவம் செய்தான்.
இதனால் அகமகிழ்ந்து போன இந்திரன், அரசனை தன் லோகத்துக்கு அழைத்து உபசாரம் செய்வித்து, வழியனுப்பும் பொழுது வெற்றிலையை தானம் செய்தான்.
முதன் முதலில் தாம்பூலம் கொடுக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியவன் இந்திரன், வாங்கி கொண்டவன் வானிவத்சரகன். இவன் மூலமாக தான் பூலோகத்தில் வெற்றிலை நுழைந்தது.
வெற்றிலையின் மகத்துவத்தை தெரிவித்து, அதை உட்கொண்டால் எப்படி தேக சுத்தி ஏற்படுகிறது, மனதுக்கு இதம் அளிக்கிறது & ஐஸ்வரியத்தை நல்கும் லட்சுமி கடாக்க்ஷம் பொருந்தியது என விவரித்து அரசனை வழியனுப்பி வைத்தான் இந்திரன்.
சிறிது காலத்தில் வெற்றிலையின் ருசியில் லயித்து அதை எப்படியெல்லாம் உட்கொள்ளக்கூடாதோ, உபயோகப்படுத்த கூடாதோ அவ்வனைத்தையும் செய்தான் அரசன். இதனால் அவன் தேசத்தில் தரித்திரம் தலை விரித்து ஆட ஆரம்பித்தது. பின் பிரம்மாவிடம் தவம் புரிந்து அதற்கான பரிகாரங்களை கேட்டறிந்து செய்து ஷேமித்தான் என்கிறது புராணம்.
வெற்றிலை சாகுபடி:
இக்காலத்தில் வெற்றிலை அனைவர் வீட்டிலும் வளர்த்து, நாமே சாகுபடி செய்கிறோம். அது தவறு, அதற்காக ஒரு கொடி குலத்தையே ஏற்படுத்தி வைத்திருக்கிறான் பிரம்மன்.
பிராமணர்கள் வெற்றிலையை தீண்டி பறிக்க கூடாது.
வெற்றிலை பறித்ததிலிருந்து ஒரு வாரம் நன்றாக இருக்கும். அப்படியில்லை என்றால் அதில் மருத்துவ குணம் சரிவர இல்லை அல்லது பறித்தவர் சரியில்லை என்று பொருள்.
வெற்றிலையின் அம்சம்:
- காம்பில்: உமா மகேஸ்வரன் அர்தநாரியாக எழுந்தருளியுள்ளனர்
- நடுவில்: லட்சுமி நாராயணன்
- நுனியில்: சரஸ்வதி பிரம்மா

காரிய முறை:
வெற்றிலை இரட்டை படையில் இருக்க வேண்டும்.
- தெய்வ காரியம்: முழுமையான வெற்றிலையும் உடைத்த களி பாக்கும் (சீவல் கூடாது). வெற்றிலை காம்பு பகவானை நோக்கியும், நூனி நம்மை நோக்கியும் இருத்தல் வேண்டும்.
- லௌகிக காரியம்: முழுமையான வெற்றிலை, களி பாக்கு & சீவல் சேர்த்து தாம்பூலம் தானம் கொடுத்தல் வேண்டும். வெற்றிலை காம்பு அதிதி நோக்கியும், நூனி நம்மை நோக்கியும் இருத்தல் வேண்டும்.
- பித்ரு காரியம்: முழுமையான வெற்றிலையும் உடைக்கப்படாத முழு கொட்டை பாக்காக இருக்க வேண்டும்.
உட்கொள்ளும் முறை:
தாம்பூலம் தேக ஆரோகியத்திற்கும், மன சுத்திக்கும் & ஐஸ்வர்யத்தை நல்குவதற்கும் மிக அவசியம். ஆதலால் அதை விடாமல் தானம் செய்து மற்றும் உட்கொள்ளுதல் வேண்டும்.
வெற்றிலையை தனியாக உட்கொள்ளக்கூடாது, இது மூலிகை & வீர்யம் அதிகம். அப்படி எடுத்துக்கொண்டால் உடலில் பற்பல நோய்கள் உண்டாகும்.
அதேபோல் வெற்றிலையை இந்த நான்கு வஸ்துக்களை தவிர தாம்பூலமாக வேறு எதையும் கலந்து உட்கொள்ளக்கூடாது. இல்லையெனில் இதுவும் நோயையும், தரித்திரத்தையும் உண்டாக்கும்.
- பாக்கு
- சுண்ணாம்பு
- சீவல்
- பச்சை கற்பூரம்

காம்பை கிள்ளி எடுத்து, நுனியை கிழித்து விட்டு, வெற்றிலையின் நடுவில் உள்ள நரம்பை எடுத்த பின் உட்கொள்ளுதல் வேண்டும். இம்மூன்றிலும் நஞ்சு உள்ளது.
ஒற்றை படையில் மூன்று (அ) அதற்கு மேல் வெற்றிலையின் எண்ணிக்கை இருக்க வேண்டும்.
வெறும் வயிற்றில் உட்கொள்ளுதல் கூடாது.
முக்கியமாக ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணிய வெற்றிலையை மட்டுமே உட்கொள்ளுதல் வேண்டும்.
காலம் முறை:
- காலை: வெற்றிலையுடன் பாக்கு அல்லது சீவல் அதிகமாக கொள்ளுதல் வேண்டும்.
- மதியம்: வெற்றிலையுடன் சுண்ணாம்பு அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இரவு: வெற்றிலை அதிகமாக மற்ற வஸ்துக்கள் குறைவாக சேர்த்தால் வேண்டும்.
உபயோகிக்க கூடாத நாட்கள்:
பௌர்ணமி , அமாவாசை, வைதீக, விரத & ஸ்ரார்த தினங்கள்
தகுதி இல்லாதவர்கள்:
பிரம்மச்சாரிகள் & சந்நியாசிகள் தாம்பூலம் தரிக்கக்கூடாது. ஆகவே அவர்களுக்கு தாம்பூலம் தானம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நமக்கு ஏற்படும்.
எச்சரிக்கை:
வெற்றிலை பாக்கை உபயோகிக்க கூடாத நாட்களில் உபயோகிப்பதாலும், போட்டுக்கொள்ள வேண்டிய முறையில் போட்டுக்காமல், தாம்பூலம் இல்லாமல் சுப காரியங்கள் செய்வதாலும் தரித்திரம் உண்டாகும், பிணி பிடிக்கும், ஐஸ்வர்யம் நம்மை விட்டு விலகும்.
அளவு மீறினால் அமிர்தமாகிய வெற்றிலையும் நஞ்சு என்பதை நினைவில் கொண்டு உட்கொள்ளுதல் வேண்டும்.
ஓம் நமோ பகவதே
வாசுதேவயா தன்வந்த்ரயே
அமிர்தகலாஷா ஹஸ்தியா
சர்வாமய வினஷானயா
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மகாவிஷ்ணுவே நமஹ: