11. உபநயனம்

(பிராமணனாக பிறந்தவனை பிராமணத்தன்மை பெறச்செய்கின்ற ஸம்ஸ்காரம்)

உபநயனம் என்றால் சமீபத்தில் அழைத்து செல்வது என்று ஒரு பொருள்படும். எதற்கு சமீபத்தில்? குருவிடம் அழைத்து செல்லப்பட்டு, குருவிடம் தன்னை ஒப்படைத்து, குருவால் தகுதி பெற்று, வேதத்தின் அருகே அழைத்து செல்லப்படுவது, அதன்மூலம் பரம்பொருளை அடைவது.

உபநயனமானவனை துவிஜன் இரு பிறப்பாலன் என்பர். தாயிடமிருந்து வெளியானது பௌதிகப்பிறப்பு, உபநயனமானது தெய்வீகப்பிறப்பு.

உபநயனமான பின் பெறும் நிலையே பிரும்மசரியம். பிரும்ம = வேதம், பரம்பொருள் & சரியம் = நடைமுறை. வேதம் ஓதுவதையே நடைமுறையாய் கொண்டு அதன் பொருளுணர்ந்து, அதன் வழியே பரம்பொருளை உணர்வதே பிரும்மசரியம்.

பிறந்தபின் ஏழாவது வயதில் உபநயனம் செய்வித்தல் வேண்டும். பதினாறு வயது வரை காயத்ரியை ஏற்கத்தக்க இளம் மனம் இருக்குமாதலால் அதற்குள் உபநயனம் செய்விக்கலாம். அதன்பிறகு செய்விப்பது பலனற்றது.

உத்ராயனம், குறிப்பாக மாசி மிக சிறந்தது உபநயனத்திற்கு.

upanayanam

முப்புரி நூல்

உபநயனத்தின் முக்கிய அங்கம் முப்புரி நூல் (பூணூல்) தரிப்பதாகும். அதனை இடது தோளிலிருந்து வலது இடைவரை தொங்கும்படி தரிப்பது முறை. அதற்கு குறைந்ததும் அதிகநீளமுள்ளதும் ஏற்றதல்ல. பிரும்ம முடிச்சு மார்பின் கீழ் வரக்கூடாது.

மூன்று இழைகளின் மிக முக்கியமான அர்த்தம் இட, பிங்கல மற்றும் சூட்சம நாடி ஆகும்.

பூணூலில் ரோமம் சிக்கினால் பத்து முறை காயத்ரியை ஜபித்து அலம்ப வேண்டும். பூணூலில் மற்ற பொருள் எதனையும் மாட்டக்கூடாது.

உபநயனமான பின் பூணூலும் சிகையுமின்றி செய்யும் எந்த செயலும் பயனற்றதாகும்.

அடுத்ததாக பலாச தண்டம், அஜினம், மௌஞ்சீ தாரணம்.

பலாச தண்டம்

பலாச தண்டம் (புரசு மரத்தின் குச்சி) ஞாபக சக்தியை வளர்க்கும் எனச் சொல்லப்படுகிறது. மேலும் தேவர்கள் காயத்ரியை ஜபிக்கையில் பலாச மரம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு மூன்று மூன்று இலைகளாக துளிர் விட்டதாம்.

உபநயனத்தில் ஆகவே பலாச தண்டம் ஏற்பது முக்கியமாய் சொல்லப்படுகிறது.

அஜினம் (மான்தோள்)

இது சத்வ மிருகத்தின் குணங்களை பிரதிபலிக்கிறது, மேலும் பிரம்மச்சாரி மிகவும் ஒழுக்கமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதால், அவனது மனதை அதற்கேற்ப மாற்ற உதவும்.

மௌஞ்சீ (தர்ப்ப கயிறு)

இது அவனது தூய்மையை பாதுகாப்பதோடு, தீமைகளை அகற்றுவதாகும்.

பிரும்ஹோபதேசம்

பிறகு குரு, தந்தையிடம் இருந்து காயத்ரி மந்திர உபதேசத்தை (பிரும்ஹோபதேசம்) பெறுவது.

ஓம் பூர்ப்ப வசுஹு தசவிதுர் வர்ரெண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி தியோய பரசோதயாத்”

இந்த மூல மந்திரத்தை ஏற்படுத்தியவர் விஸ்வாமித்ர மஹரிஷி.

தனது காயத்தையே  அதாவது உடலையே  குத்து விளக்கின் ஐந்து முனைகளில், தலையை ஒரு முனையிலும், கால்கள் இரண்டையும் மற்ற இரு முனைகளிலும், கைகள் இரண்டையும் மற்ற இரு முனைகளிலும் வைத்துக் கொண்டு கூறிய மந்திரம்  ஆகவே உடலையே அதாவது காயத்தையே திரியாகப் போட்டு தன்னையே தீபமாக உயர்த்திக் கொண்டவர் விஸ்வாமித்ரர்.

ஆகவேதான் காயத்ரி மந்திரம் என்னும் பெயர் ஏற்பட்டது. காயத்ரி தேவியை பூஜிக்க தகுந்த மந்திரமாக காயத்ரி மந்திரம் இருக்கிறது.

பிக்ஷை

முதலில் தாயிடமிருந்து அரிசியை பிக்ஷையாக கேட்டு பெறுகிறான், பின் தாயின் சகோதரிகள், தன் சகோதரிகள், தந்தையின் சகோதரிகள்  & சுமங்களிகளிடம் கேட்டு பெறுகிறான். பிக்ஷாகரணம், தான் என்ற அகங்காரத்தை கட்டுப்படுத்த செய்யப்படுகிறது.

“பவதி பிக்ஷாம் தேஹி”

அபிவாதயே

தான் பிறந்த குலம், கோத்திரம் & நாமகரணத்தின் போது வைக்கப்பட்ட ஷர்மா என்று முடிகின்ற பெயர் போதிக்கப்படுகிறது. சான்றோற்களை நமஸ்கரிக்கும் போது தன்னை அறிமுகப்படுத்தும் ஸம்ஸ்காரம்.

Leave a comment