பகுதி – 1
கி.பி 1323ம் ஆண்டு ஆனி மாதம் 22ம் தேதி, அராபியமும், பாரசீகமும் கோலோச்சிய டில்லி அரசவை சுல்தானின் வரவை எதிர்நோக்கி காத்திருந்தது.
பலமுறை அரசவை கூடியும் முடிவு எட்டப்படாததால், தந்தையான சுல்தானிடம் எப்படியும் வாதாடி தனது பயணத்திற்கான ஒப்புதலை பெற்றே தீர வேண்டும் என்று சபதமேற்று அமர்ந்திருந்தான் இளவரசன்.
இளவரசனின் சபதம் நிறைவேறியது இன்று, பயணத்திற்கான ஆணையை பிறப்பித்தான் சுல்தான் கியாசுதீன் துக்ளக். பெரும் காலாட்படையும், 60000 குதிரை படையும் வழங்கப்பட்டது இளவரசனுக்கு.
கி.பி 1311ம் ஆண்டு மாலிகாபூர் முதல் படையெடுப்பு.
கி.பி 1318ம் ஆண்டு குரூஸ்கான் இரண்டாவது படையெடுப்பு.
தென் பாரதத்தை மூன்றாம் முறையாக அழிக்க வந்த ஆணை இது.
இந்த படை விளைவித்த நாசம் சொல்லி மாளாது…
ஒரு தலைமுறையே அழிந்து போன குருதி வரலாறு.
வைணவமும், சைவமும் சேர்ந்தே பேரழிவை சந்தித்த வரலாறு.
இஸ்லாம் தென் பாரதத்தை தழுவிய வரலாறு.
படை கிளம்பியது புழுதி பறக்க, தலைமையேற்று முன்னேறி வந்தான் இளவரசன் உலுக்கான்.
அப்போதைய ஹொய்சாள மன்னனான மூன்றாம் வீரவல்லாளன் தன் மக்களை காக்கும் பொருட்டு உலுக்கானிடம் சரண் புகுந்தான். வீரவல்லாளனின் இந்த பணிவு உலுக்கானுக்கு எந்த தடையும் இல்லாமல் தென் பாரதத்தில் நுழைய எளிதாக அமைந்தது.
வழியிலுள்ள பெருமாள் மற்றும் சிவ ஸ்தலங்கள், குளங்கள், ஏரிகள் பாழ்படுத்தியதோடு நில்லாமல் ஸ்ரீ பண்டாரத்தையும் கொள்ளையிட்டு வழிபாட்டிற்குறிய விக்ரஹங்களையும் அபகரித்தான்.
நீர் ஆதாரங்களை ஆழிப்பதன் மூலம் பஞ்சம் தலையெடுக்கும், மக்கள் அனைவரும் மாய்வர்.
டில்லியிலிருந்து 6 மாத கால பயணத்திற்கு பின் அவனது இரை தென்பட்டது அவன் விழிகளுக்கு. இரையை புசிக்க காத்திருக்கும் வேங்கையின் சீற்றம் பிம்பமாய் பிரதிபலித்தது வடக்காவிரியில்.
உலுக்கான் காலூன்றி நின்ற இடம் அநேக தங்க வைரங்களின் கருவூலமாக திகழ்ந்த திருவரங்கம். அவனது நோக்கம் நம்பெருமாள் அழகிய மணவாளன்.
வளரும்