06. ஆர்லவ் வைரம்

பெரிய பெருமாள்
திருப்பாற்கடலில் தோன்றி
பிரம்மன் ஆராதித்து
சூரியன் பூஜித்து
வைவஸ்வத மனு ஆசர்யித்து
ஈஷ்வாகு வணங்கி
தசரதன் போற்றி பாதுகாத்து
பெருமானான ராமனே சேவித்து
விபீஷணன் யாசித்து
சோழ மன்னன் தர்மவர்மா ஸ்வீகரித்து
உகந்து பள்ளி கொண்ட ஷேத்ரம்
அரங்கமாநகர்!

an

பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண் 
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும் 
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும் 
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

– அரங்கமாநகர் தானாகவே உண்டான ஸ்வயம் வ்யக்த ஷேத்ரம்.

* ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள் மொத்தம் எட்டு – வானமாமலை, ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், திருவரங்கம், பத்ரிகாசரமம், சாலக்ராமம், புஷ்கரம், நைமிசாரண்யம்.

– பதினொரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஒரே பெருமான் அரங்கன்.

* 12 ஆழ்வார்களில் மதுரகவியாழ்வார் திவ்யதேசங்கள் எதனையும் மங்களாசாசனம் செய்யவில்லை. அவர் நம்மாழ்வாரைப் பற்றி மட்டும் ஒரு பதிகம் அருளிச் செய்தார். வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த மாறன் என்று நம்மாழ்வாரிடம் மட்டும் ஆழங்கால் பட்டு அவர் ஆழ்வாரானார்.
* இதற்கு அடுத்து திருமலை, திருப்பாற்கடல் ஆகிய க்ஷேத்ரங்கள் பத்து ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

– வருடத்திற்கு 250 நாட்கள் உத்ஸவம் அரங்கேறும் ஒரே பெருமான் அரங்கன்.

– அரங்கன் மோக்ஷ பெருமான்.

* 2 ஆழ்வார்கள் (திருப்பானாழ்வார், ஆண்டாள்) அரங்கன் சன்னிதியில் முக்தி பெற்றனர்.

– அரங்கன் வாங்கும் பெருமாள் கொடுப்பவன் அல்ல.

* எதை வாங்குபவன்? நம் ஆத்மாவை பெற்று மோக்ஷம் அளிப்பவன். ஆகையால் நாம் தான் அரங்கனுக்கு கொடுக்கணுமே அன்றி கேட்பதற்கு இல்லை. கேட்பதற்கு என்றே வேறு க்ஷேத்ரங்கள் உள்ளன, வரம் தரும் ராஜன் உள்ளான், வேங்கடவன் உள்ளான். ஆகையால் தான் கூரேசனுக்கு கிருமி கண்ட சோழனால் நேத்திரங்கள் பறிப்போன நிலையில் ராமானுஜர் வரதராஜனிடம் வேண்டினார், அரங்கனிடம் அல்ல.

தலைப்புக்கு எப்பொழுது வரப்போகிறேன் என்று நீங்கள் நினைப்பது தெரிந்துவிட்டது. இதோ வந்துவிட்டேன்.

பதினேழாம் நூற்றாண்டில் கோல்கொண்டாவின் கொல்லூர் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பெரிய வைரத்தை செதுக்கி அரங்கனின் இரு நேத்திரங்களில் பதிக்கப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு கோஹினூர் வைரத்தை ஒட்டி இருந்தது (சற்று குறைவு).

Orloff_copy

இந்த விடயத்தை அறிந்ததிலிருந்து ஓர் பிரெஞ்சு வீரன் அரங்கனின் வைரங்களைப் அபகரிக்க திட்டம் தீட்டினான். அதற்காகவே அவன் கி.பி. 1747-ல் அரங்கத்துக்கு வந்தான், வைணவத்துக்கு மாறினான். அங்கிருந்த அர்ச்சகர்களிடம் நட்பை வளர்த்துக்கொண்டான். உரிய நேரத்திற்காக காத்திருந்தான்.

நேரமும் வந்தது, வைரம் பதிக்கப்பட்டிருந்த அரங்கனின் ஒரு கண்ணிலிருக்கும் வைரத்தை எடுத்தான். போலி கல் ஒன்றை அந்தக் கண்ணில் பதித்தான். இன்னொரு கண்ணின் வைரத்தை எடுப்பதற்குள் உடல் நடுங்கியது, பயம் கவ்வியது. உடனே கோயிலிலிருந்து வெளியேறினான்.

பிரெஞ்சு வீரன் வைரத்தை ஆங்கிலேய கேப்டன் ஒருவனிடம் 2,000 பவுண்ட்களுக்கு விற்றான் என்கிறது வரலாறு.

ஆங்கிலேயே கேப்டனிடமிருந்து சில கைகளுக்கு மாறிய அந்த வைரம், ஈரானைச் சேர்ந்த பெரும் செல்வந்தரான ஷஃப்ராஸ் என்பவர் வைரத்தை நல்ல விலைக்கு வாங்கினார். பதினெட்டாம் நூற்றாண்டில் ரஷ்யாவின் பிரபுக்களில் ஒருவரான கிரிகோரி ஆர்லவ் என்பவர், ஷஃப்ராஸிடமிருந்து அந்த வைரத்தை 400,000 ரூபல்ஸ் விலை கொடுத்து வாங்கினார் என்று சொல்லப்படுகிறது.

கிரிகோரி ஆர்லவ் இறுதியாக வைரத்தை வாங்கியதால் ஆர்லவ் வைரம் என்ற பெயர் நிலைத்து போனது. சுமார் 190 காரட் எடை கொண்ட ஆர்லவ் வைரம், தற்போது ரஷ்யாவின் மாஸ்கோ கிரெம்ளின் மாளிகையில் பாதுகாப்பாக இருக்கிறது.

சில ஆய்வாளர்கள், கோயில் குறித்த பதிவேடுகளில் இப்படி ஒரு வைரம் இருந்ததாகவோ, அது பதினெட்டாம் நூற்றாண்டில் காணாமல் போனதாகவோ குறிப்புகள் இல்லை என்கிறார்கள்.

இது உண்மையோ கட்டுகதையோ, அரங்கம் இழந்த இன்றும் இழந்து கொண்டிருக்கிற செல்வம் இது மட்டும் தானா என்ன? அந்த அரங்கனுக்கே வெளிச்சம்.

நம்மால் இயன்றவரை அரங்கத்தை காப்போம்! மீட்போம்!

உய்ய ஒரே வழி , உடையவர் திருவடி.

Leave a comment