29. பித்ருக்கள்

யார் நம்மை ரக்ஷிப்பவர்கள்? தாய், தந்தை, உற்றார், உறவினர் – சில காலத்தில், சூழலில், ஒரு பிறவியில் ரக்ஷிப்பர். ஆனால் பகவான் எல்லா காலத்திலும், தேசத்திலும், பிறவியிலும் ரக்ஷிப்பார்.

பகவானுக்கு அடுத்து இன்னாரும் சுமார் 86 லட்சம் யோஜனை (1 யோஜனை = 12 Kms) தூரத்திலிருந்து நம்மை ரக்ஷிக்கிறார்கள்.

தூரம் அதிகம் நம்மை பொறுத்தவரை, ஆகையால் நமக்கு அவர்கள் வெகு தூரத்து சொந்தம் என்று எண்ணி சுலபமாக கடந்துவிடுகிறோம்.

அவர்களுக்கோ இது நெருங்கிய தூர/ கால பிரயாணமே, ஆகையால் அவர்களுக்கு நாம் நெருங்கிய சொந்தம். அதனால் தான் அமாவாசை, தர்ப்பணம், சிரார்த்தம் என்றால் நம்மை நோக்கி வந்துவிடுகின்றனர்.அவர்களை பொதுவாக பித்ருக்கள் என்று அழைக்கிறோம், அவர்களின் வசிப்பிடம் பித்ரு லோகம்.

ஆத்மா 64 உறுப்புகள் கொண்ட ஸ்துல சரீரத்தை அடைந்து அறிவு, அனுபவம், இயக்கம் பெற்று கர்மாவை கடக்கிறது. ஆத்மா சரீரத்தை விடுத்து கிளம்பியதும் அதன் பெயர் பிரேதம். பிரேதமானது அடுத்த இலக்கை நோக்கி பயணித்து மோக்ஷமோ, சொர்க்கமோ, நரகமோ, மீண்டும் பூமியோ அடைகிறது கர்மத்திற்கு ஏற்ப.

இந்த பிரேதம் என்கிற ஆத்மாவின் அடுத்த இலக்கை நோக்கிய பிரயாணம் செவ்வென நடக்க பரமாத்மாவால் நியமிக்கப்பட்ட தேவர்களே பித்ருக்கள். இவர்கள் வேறு யாரும் அல்லர், நம் குல முன்னோர்கள்.

நம் மூதாதையர்களில், யார் ஒருவன் பூலோகத்தில் வாழ்ந்த போது அனைத்து தர்மங்களையும் கடைப்பிடித்து தேகத்தை விடுக்கிறானோ, அவனுக்கு பித்ரு லோகத்தில் தற்காலிக இடம் கர்மத்திற்கு ஏற்ப. இக்காலத்தில் அவனது குலத்தை காப்பதே அவனுக்கான பணி.

ஆத்மா தேகத்தை விடுத்தபின் சூக்ஷ்ம சரீரமே, இந்திரியங்கள் இல்லாததால் இன்பத்தையோ, துன்பத்தையோ அனுபவிக்க இயலாது. ஆனால் பூர்வ ஜென்ம வாசனை உண்டு.

இந்த வாசனையை கொண்டு தேகத்தை விடுத்த பின்னும் உற்றார், உறவினர்களையே சுற்றி இருக்கும். இதன் பரிணாம வெளிப்பாடே பசி, தாகம் போன்ற எண்ணங்கள் ஆத்மாவிற்கு ஏற்பட காரணம்.

ஆத்மாவின் இந்த பசி, தாக எண்ண ஓட்டமே அதற்கான அடுத்த இலக்கை நோக்கிய பிரயாணத்தை தடைப்பட செய்கிறது.

இது ஆத்மாவிற்கு நிற்கதியான நிலை, போக்கிடமற்று, உடல் இல்லாமல் பசி, தாகத்தை தீர்த்து கொள்ள தன் வாரிசுகளை நம்பி, அவர்கள் நம்மை கரை ஏற்றிவிடுவார்கள் என்று காத்துக்கொண்டிருக்கும்.

இதன் பொருட்டு அனுஷ்டிக்கப்படுவதே அபர காரியங்கள்.

கர்த்தா வார்க்கும் பிண்டம், எள்ளு, நீரை கொண்டே ஆத்மாவின் எண்ணத்தில் சாந்தி நிலவி சபிண்டிகரணம் முடிவில் அதன் அடுத்த கட்ட பிரயாணத்தை தொடங்கும்.

அபர காரியம் தடைப்பட்டால் ஆத்மாவிற்கு பிரயாணம் இயலாமல் போகக்கூடும். அவ்விதமான ஆத்மா துர்வாசனைகளுடன் கர்த்தா மற்றும் உற்றாரை சுற்றியே இருக்கும்.

அபர காரியத்தின் முக்கியமான அங்கம் துக்கம் விசாரிப்பது.

துக்கம் விசாரிப்பது என்றால் அபர காரியம் நிறைவேற வசதி வாய்ப்பை (பொருள், பணம், பிராமணர்) விசாரித்து ஏற்படுத்தி கொடுப்பது. ஆகையால் தான் துக்கம் எவ்வளவு சீக்கிரம் விசாரிக்க முடியுமோ, செய்து விட வேண்டும்.

இந்த அபர சம்ஸ்காரத்தை கண்காணிப்பதே பித்ருக்களின் கர்மம். இங்கே தான் நாம் தவறிழைத்து நம் முன்னோர்கள் தானே என மெத்தனத்துடன் இருந்துவிடுகிறோம்.

பித்ருக்களின் பலம் நம்மைவிட 1000 பங்கு அதிகம்.  அவர்கள் அனுக்ரஹித்தாலும் 1000 பங்கு, சபித்தாலும் 1000 பங்கு.

தன் வம்சாவழியான தேகத்தை விடுத்த ஆத்மாவிற்கு தர்ப்பணம், சிரார்த்தம் போன்ற அபர காரியம் நடைபெறாமல் பசி, தாக எண்ணத்தோடு திக்கு தெரியாமல் இருந்தால் அங்கே நிகழும் பித்ருக்களின் சாபம்.

தேகத்தை விடுத்த ஆத்மா, ஜீவித்து இருந்தபொழுது யாரெல்லாம் எந்தெந்த விகிதத்தில் உறவு கொண்டிருந்தனரோ அதற்கேற்ப அமையும் 1000 பங்கு சாபம்.

பகவன் நின்று கொல்லும், பித்ரு அன்றே கொள்வான். அபர காரியம் தடைப்பட்ட அந்த நொடியே சாபம் உருபெரும்.

பித்ருக்களின் சாபம் இருப்பதை எப்படி அறிந்துகொள்ளலாம்.

  • திருமண தடை
  • வியாதி
  • குழந்தையின்மை
  • குடும்ப சண்டை
  • எல்லாம் இருந்தும் விளங்காமல் இருப்பது

கரை தேறாத ஆத்மாவை சாந்தி செய்து அதன் இலக்கை நோக்கி பயணிக்க உதவும் வரை, வம்ச வழித்தோன்றல்களுக்கு பித்ருக்களின் சாபம் தொடரும்.

இந்த சம்ஸ்காரம் நடைபெறுவதற்கு உறுதுணையாக யார் இருந்தாலும் அப்பொழுதே நிகழும் பித்ருக்களின் 1000 பங்கு அனுக்ரஹம் அவர் மற்றும் அவர் வம்சத்திற்கு.

பசி, தாகம் எண்ணம் – 1000 பங்கு சாபம்

ஜெய் ஸ்ரீமன் நாராயணா

Leave a comment